Saturday, May 15, 2010

எச்சில் கவிதைகள்

புலரும் பொழுதுகளின் நிறமில்லா ஜனனத்தில்
கருப்பு வெள்ளை கனவுகளில்
தலை அமிழ்ந்து முன்பல் தெரிய உறங்குகையில்
வாயோரம் எச்சிலாய் வழிந்து விடுகின்றன
இரவெல்லாம் நான் சுமந்த கவிதைகள் …..

சிறகுகள் இலவசம்

பறக்கத் தொடங்கினேன்.
எல்லைகளற்று தொலைவுகளற்று
குறிக்கோள் அற்று.
தரை விட்டு மெல்ல எழும்பி
புழுதி தவிர்த்து, உயரங்கள் கடந்து,
குளிர் உரைத்து, காக்கைகளுடன் சம்பாஷித்து,
கருடர்களுடன் நடந்த உரையாடலின் போது
அலுவலகத்தில் அணைக்கப்படாத என்
கணினி நினைவுக்கு வந்ததில்
தரை தட்டினேன் - மீண்டும்
பறக்க எத்தனிக்கையில் மனைவியின்
கைபேசி விளிப்பில் சிறகுகள் மறைத்து
சிரித்து வைத்தேன் - ஒவ்வொரு முறை
பறந்த போதும் சிறகுகள்
சுருக்கப்பட்டேன் . சுமைகளற்ற
யாரேனும் பறக்க முயலுங்களேன்.
என் சிறகுகள் இலவசம்.........

Friday, July 17, 2009

தொலைத்த புன்னகை...

கை நீட்டி முறுவளித்தது குழந்தை.
முகம் திருப்பிக்கொண்டேன் -
தாயின் அழுக்கு முகம் கண்டு....

Saturday, July 4, 2009

தொலைவு....

உனக்கும் எனக்குமான தொலைவுகள்

வளர்ந்து கொண்டே சென்றாலும் நினைவுகளால்

உன்னை துரத்தி நெருங்க முயற்சிக்கிறேன்....நினைவுகளுக்கு

காலமும் தூரமும் நேரமும் கிடையாதென்பது உண்மை.

Friday, July 3, 2009

துவக்கமில்லா முடிவுகள் (சில)

ரயிலில் வரும் குழந்தையிடம் கிடைக்கும் நட்பு,

பேருந்தின் ஜன்னலோர இருக்கை பெண்ணின் குறுநகை,

காதலியிடமிருந்து கிடைக்கும் அவசர முதல் முத்தம்,

தலைக்குச்சூடாமல் வாடி விடும் மல்லிச்சரம்,

தூரத்தில் காதலியை கண்டதும் அணைந்துவிடும் சிகரெட்,

வாங்கிவிட எண்ணும் Toyota Camry,

எனக்கு முன் நிற்பவனுடன் தீர்ந்துவிடும் சினிமா டிக்கெட்,

கருவிலேயே கலைந்துவிடும் சிசுக்கள்,

கடவுள் தோன்றியவுடன் மறைந்து விடும் கனவு,

கோடைக்கால குளிர் மழை,

கரை புரளும் காவிரியின் அரசமரத்தடி

இவற்றுடன்

உன்னிடத்தில் சொல்லாமலே கருகிப்போன என் காதலும் கூட....

Thursday, July 2, 2009

நியாயங்கள்

உன் எல்லா வெற்றிகளும் நியாயப்படுத்தப்படும் - ஆனால்
உன் எந்த தோல்வியும் அல்ல.

Monday, June 29, 2009

தேடல்....

சொந்தங்களின் நசநசப்பில் இருந்து விடை பெற்று
முதலிரவு அறைக்குள் நீ நுழைந்து
என் கண் நோக்கி ஏதோ தேடினாய் - என்னவென்று கேட்டதில்
ஒண்ணுமில்லை என்று சினுங்கிகொண்டாய்.....

எல்லாம் முடிந்து விலகி படுத்து தேடியது
என்னவாக இருக்கும் என்று நான் யோசிக்கையில்
"உண்மை" என்று பதிலளித்தது உள்மனது.....
உண்மையாகவே அதைத்தான் தேடினாளா/தேடினானா?....

எல்லா இரவுகளிலும் சில உண்மைகளின்
தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
விடைகள் தான் கிடைப்பதில்லை.....